திருட்டு 42 - எதுகை அழுகை
( மனம் உடைந்தப் பெண் இறைவனிடம் வேண்டுகிறாள் )
சாய்ந்திருக்கத் தோள் வேண்டும்
மாய்ந்துப் போவேன் இல்லையெனில் - எனக்
காய்ந்துப் போன என்னுள்ளம்
சேய் போல அழுகிறது
வான தேவன் உனை நோக்கி
தானம் வழங்க வேண்டுகிறேன்
கானல் திரியும் உள்ளத்தில்
பானம் ஊற்றி இளைப்பாற்றும்
இரத்தக் கண்ணீர் வடிக்கின்றேன்
இரக்கம் வேண்டி அழுகின்றேன்
கரம் குவித்து வணங்குகின்றேன்
தரமற்ற வாழ்வை வளமாக்கும்
அழுவதற்குக் கண்ணீர் இல்லை
எழுவதற்குத் துணிச்சல் இல்லை
தழுவுதற்குக் கைகள் இல்லை
விழுந்த என்னைத் தூக்கி விடும்
புரிந்துக் கொள்ள யாருமில்லை - எனைத்
தெரிந்துக் கொள்ள யாருமில்லை
பரிந்துப் பேச யாருமில்லை - என
விரக்தி அடைந்து அழுகின்றேன்
சாய்ந்திருக்கத் தோள் வேண்டும்
மாய்ந்துப் போவேன் இல்லையெனில் - எனக்
காய்ந்துப் போன என்னுள்ளம்
சேய் போல அழுகிறது

Comments
Post a Comment