திருட்டு 136 - சரியா தவறா



பல மனிதர்களுக்கு 

வாழ்க்கைப் பரிட்சை 

நடத்தினாராம் 

கடவுள் 

வினாத்தாள்களைத் திருத்தும்படி 

என்னிடம் கேட்டார் 

அவருக்கு 

வேலைப்பளு அதிகம் போலும் 


திருத்திக் கொடுத்தேன் 


ஒரே பார்வையில்  

மதிப்பாய்வு செய்தார் 


பளீர் என அறைந்தார் 

என் கன்னத்தில் 

அய்யோ கடவுளே ! 

என அலறியபடி 

என்ன தவறு இழைத்தேன் 

என்று கேட்டேன் 


“கீழ்க்கண்ட வாக்கியம் 

சரியா தவறா 

அறிவு அழகு 

அறிவின்மை இழிவு “


மேற்கூறிய  கேள்விக்கு 

சரி என 

பதிலளித்த அத்தனை அறிவாளிகளுக்கும் 

முழு மதிப்பெண் அளித்திருந்தேன் 


ஓர பார்வையால் 

கண் காட்டினார் 


பக்கத்தில் ஒரு குழந்தை 

மொழி அறிவின்றி 

இலக்கண அறிவின்றி 

எழுத்துக்களை இஷ்டத்திற்கு 

ஆட்டிப் படைத்துப் 

பேசிக்கொண்டிருந்தது 


அழகாய் !


Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !