திருட்டு 48 - கவித்திருடன் கைதானான்
கைதானேன் !
கவிதைகளைத்
திருடிய
குற்றத்திற்காக ,
யாப்புக்குள்
கவிதைகளை
அடக்காததால்
காப்புக்குள்
என் கைகளை
இட்டு
இழுத்துச் சென்றனர்
நீதிமன்றத்தில்
நீதி விசாரணை
நீதிபதி குற்றத்தைப் பட்டியலிட்டார்
'கவிதைகளைத் திருடியது'
முதல் குற்றம்
'கவிதைப் பொதுச் சொத்து'
என்றேன்
'உன் கவிதையில் இலக்கணம் இல்லை '
இரண்டாம் குற்றம்
'என் கவிதைக்கு
இலக்கு உண்டு
கனம் உண்டு
இலக்கணம் தேவையில்லை '
என்றேன்
திருடிய பொருளைத்
திருப்பிக் கேட்டார்
'படித்தவர் மனதில்
பதிந்துவிட்டது
முடியாது' என்றேன்
'கர்வம் உனக்கு'
என்றார்
'கவிஞனுக்கு இயல்பு'
என்றேன்
'இழுத்துச் செல்லுங்கள்
சிறையில் அடையுங்கள் இவனை '
தீர்ப்புக் கொதித்தது
கற்பனைச் சிறகைச்
சட்டன விரித்தேன் !
பறந்தேன் !
என் திருட்டுப்
பயணம் தொடர்கிறது !
குற்ற எண்ணிக்கை
குட்டிப் போடுகிறது !

Comments
Post a Comment