திருட்டு 77 - பெசன்ட் நகர் ஒரு ஞாயிறு காலை
மேகச் சாளரத்தின்
இடைவெளிகளில்
தன் கதிர் விரல்கள் நுழைத்து
கடலைக் கொஞ்சுகுறான்
சூரியன்
'நீ முன்னாலே போனா
நான் பின்னாலே வாரேன் '
நாட்டுப்புறப் பாடல் பாடி
பிச்சைக் கேட்கிறான்
பிச்சைக்காரன்
நடைமேடையில்
கால்விரித்தமர்ந்து
வசீகரமாக
காற்சட்டையில்
இளம் பெண்கள்
இருவர்
நிற்கின்றனர்
தேநீர் கடையில்
முகம் மலர
சிலர் அரட்டை அடிக்கின்றனர்
'அய்யே! புது மீன் தான் பா
நூறு ரூபா குடு '
மீன் கடையில்
மீன்காரி
வியாபாரம் செய்கிறாள்
கோழிக் கடையில்
தன் கடைசி
கொக்கரிப்பைப்
பதிக்கின்றன
பிராய்லர் கோழிகள்
யாரையோ
எதிர்பார்ப்பது போல்
உற்று நோக்குகின்றது
தெரு நாய்
இயக்கத்திலும்
சத்தத்திலும்
வாழ்க்கை நகர
மிதிவண்டி
மிதித்துக்கொண்டே
வாழ்க்கைக் கவிதை
கேட்கிறேன்
Comments
Post a Comment