திருட்டு 107 - பதில் சொல்ல முடியவில்லை
எண்ணக் கதவுகளை
யாரோ தட்டிய சத்தம்
எட்டிப் பார்த்தேன்
இரு காதுகள்
கேட்டன
அழுகை சத்தம் எங்கே ?
பொக்கை வாய் மொக்கை எங்கே ?
பதில் சொல்ல முடியவில்லை
கதவை மூடி
தலை சாய்த்தேன்
எண்ணக் கதவுகளை
யாரோ தட்டிய சத்தம்
எட்டிப் பார்த்தேன்
இரு கண்கள்
கேட்டன
கொக்கிப் போட்டு இழுக்கும்
பார்வை எங்கே ?
அழகை உருட்டி வைத்து
பார்த்துக்கொண்டிருந்தேனே ,
அந்தக் காட்சி எங்கே ?
பதில் சொல்ல முடியவில்லை
கதவை மூடி
தலை சாய்த்தேன்
எண்ணக் கதவுகளை
யாரோ தட்டிய சத்தம்
எட்டிப் பார்த்தேன்
இருகைகள்
கேட்டன
அணைத்து வைத்திருந்த
அரும்பு மலர் எங்கே ?
பிடித்து வைத்திருந்த
பிஞ்சுச் சுடர் எங்கே ?
பதில் சொல்ல முடியவில்லை
கதவை மூடி
தலை சாய்த்தேன்
எண்ணக் கதவுகளை
யாரோ தட்டிய சத்தம்
எட்டிப் பார்த்தேன்
ஒரு மூக்குக்
கேட்டது
மயக்கும் மூத்திர வாடை எங்கே ?
இழுக்கும் பால் மணம் எங்கே ?
பதில் சொல்ல முடியவில்லை
கதவை மூடி
தலை சாய்த்தேன்
எண்ணக் கதவுகளை
யாரோ தட்டிய சத்தம்
எட்டிப் பார்த்தேன்
இரு உதடுகள்
கேட்டன
முத்தம் செய்த
பிஞ்சு விரல்கள் எங்கே ?
பஞ்சுக் கன்னங்கள் எங்கே ?
பதில் சொல்ல முடியவில்லை
கதவை மூடி
தலை சாய்த்தேன்
எண்ணக் கதவுகளை
யாரோ தட்டிய சத்தம்
எட்டிப் பார்த்தேன்
இரு கால் தொடைகள்
கேட்டன
படுத்திருந்த பருத்திக் குட்டி
எங்கே ?
பதில் சொல்ல முடியவில்லை
கதவை மூடி
தலை சாய்த்தேன்
எண்ணக் கதவுகளை
யாரோ தட்டிய சத்தம்
எட்டிப் பார்த்தேன்
யாரும் இல்லை
எண்ணம் கேட்டது
கற்பனையையும் கவிதையையும்
கொட்டிய குழந்தை எங்கே ?
பதில் சொல்ல முடியவில்லை
கதவை மூடி
தலை சாய்த்தேன் !

Comments
Post a Comment