திருட்டு 90 - அம்மா !
வழுக்கம்பாறையில்
கிராமத்து வாசனையோடு
பிறந்தவரே !
நீங்கள் அளித்த
பிறவிக் கடனை
அடைக்க முடியாத
கடன்காரன் நான் !
கடனுக்குப் பதில்
இந்தக் கவிதையைக் காணிக்கையாய் அளிக்கிறேன் !
சற்றும் ஈடாகாது
இருந்தாலும்
ஏற்றுக்கொள்ளுங்கள் !
தாய்ப்பால் குடிக்க
மறுத்தேன்
உங்கள் பாசப்பால்
குடித்துப் பசி அடங்கியதால் !
சிக்கலானச் சூழலும்
உங்கள் புன்னகையை வென்றதில்லை !
சிரியுங்கள்
நிறைய சிரியுங்கள் !
எனக்கு ஊட்டச்சத்து உங்கள் சிரிப்பு !
ஆங்கிலத்தில் நீங்கள் அடுக்கிவைக்கும்
அழகு மொழிகள்
என் ஆன்மாவிடம் கைகுலுக்கும்
அமுத மொழிகள் !
கூட்டுக் குடும்பம்
கட்டிவைத்தச் சிறையில்
குடும்பக் கூட்டைக்
காத்தத் துணைவி நீங்கள் !
தன் சுகம் துறந்தத் துறவி!
உங்கள் எளிமைக்குள்
ஒளிந்திருக்கும் மனதைரியத்தை
வியக்கிறேன் !
என் உடலும் உள்ளமும் நலம்தானா
என மணித்துளி ஒவ்வொன்றும்
நினைக்கும் அக்கறைத் தெய்வமே !
வாழ்க்கையை
நீங்கள்
படிக்கும் முறையை
ரசிக்கிறேன் !
முதுமை மீது
எனக்குக் கோபம்
உங்கள் இளமையை
அது பறிப்பதால் !
பரவாயில்லை
மனதளவில் இன்னும்
நீங்கள் குமரி தான் !
முதுமை தீண்டாத
இளங்குமரி !
இந்தக் கவிதை போதாது
உங்களை வர்ணிக்க !
இருந்தும்
இந்தக் கவிதையைக் காணிக்கையாய் அளிக்கிறேன் !
சற்றும் ஈடாகாது
இருந்தாலும்
ஏற்றுக்கொள்ளுங்கள் !
அம்மா
ஐ லவ் யூ !
Comments
Post a Comment